கடவுளின் மகனான மெசியாவை அடையாளம் காண முயல்வோம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
கடவுளின் மகனான இயேசுவை, நம் மீட்பரை, அடையாளம் காண அழைக்கப்படுகிறோம் என்றும், எப்போதாவது நாம் ஏழையாக, சிறையில் அடைக்கப்பட்டவர்களாக, பார்வையற்றவர்களாக, உணர்ந்திருந்தோம் என்றால் இந்தக் கடவுளது அருளின் ஆண்டு நமக்கானதாக இருக்கும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 26, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கலிலேயாவில் இயேசுவின் பணியின் தொடக்கம் என்ற தலைப்பில் உள்ள லூக்கா நற்செய்தியின் இறைவார்த்தைகள் குறித்த கருத்துக்களை எடுத்துரைத்தார்.
இயேசுவை தச்சர் யோசேப்பின் மகனாக அறிந்துகொண்டிருந்த மக்கள் தொழுகைக்கூடத்தில் இயேசு எசாயாவின் ஏட்டுச்சுருளை வாசித்து இன்று இந்த மறைநூல் வாக்கு நிறைவேறிற்று என்று கூறுவதைக் கேட்டுக் குழப்பமடைகின்றார்கள் என்றும், அவர்களால் அவரை மெசியாவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதனை தங்களது பார்வையாலும் வார்த்தையாலும் வெளிப்படுத்துகின்றார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மக்கள் அவரை நன்கு அறிந்திருப்பதாக நினைத்தார்கள், ஆனால் அவர்களின் மனதையும் இதயத்தையும் திறக்க உதவுவதற்குப் பதிலாக இயேசு கூறிய வார்த்தைகள் ஒளியை மறைக்கும் ஒரு திரையைப் போல அவர்களைத் தடுத்தது என்று நற்செய்தியாளர் லூக்கா தனது வார்த்தைகளில் எடுத்துரைப்பதாகக் கூறினார் திருத்தந்தை.
இயேசுவின் பிரசன்னம் மற்றும் வார்த்தைகளால் சவாலுக்கு உட்படுத்தப்படும் நாமும் கடவுளின் மகனான இயேசுவை, நம் மீட்பரை அடையாளம் காண அழைக்கப்படுகிறோம் என்றும், அவரது சொந்த ஊர் மக்கள் போலவே நாம் அவரை நன்கு அறிந்திருந்தாலும் நமது வாழ்வில் மிக நெருக்கமான நபராக நாம் உணர்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.
நாசரேத்தில் பேசும் இயேசுவின் தனித்துவமான அதிகாரத்தை நாம் உணர்கிறோமா? வேறு யாராலும் நமக்குக் கொடுக்க முடியாத மீட்பின் அறிவிப்பை தாங்கியவர் அவர் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோமா? நம்மைப் பற்றியும் நமக்கு மீட்புத் தேவை என்பது பற்றியும் நாம் உணர்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க அழைப்புவிடுத்த திருத்தந்தை அவர்கள், எப்போதாவது நாம் ஏழையாக, சிறையில் அடைக்கப்பட்டவர்களாக, பார்வையற்றவர்களாக, உணர்ந்து இருந்தோம் என்றால் கடவுளின் இந்த அருளின் ஆண்டு நமக்கானதாக இருக்கும் என்றும் கூறினார்.
இயேசு தனது உடனிருப்பால் கடவுளது அருளின் ஆண்டு வந்துவிட்டது என்று அறிவிக்கின்றார் என்றும், கடவுளால் அருள்பொழிவு செய்யப்பட்ட இயேசுவை நாசரேத்துர் மக்கள் மெசியாவாக அடையாளம் காணத் தவறிவிட்டார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவை அடையாளம் காண உதவும்படி கடவுளின் தாயும் நம் தாயுமான மரியாவிடம் நம்பிக்கையுடன் திரும்புவோம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள் மூவேளை செப உரைக்குப்பின் திருப்பயணிகளுக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்